அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் தற்போது விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் இதில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன்,குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இடையேயான முதல் நேரடி விவாதம் நேற்று நியூயார்க்கில் நடைபெற்றது.

குறித்த நிகழ்ச்சி அமெரிக்காவில் பிரபலமான 13 டி.வி. சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பானது.
அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட சர்வேயில் 8 கோடியே 40 லட்சம் பேர் இந்த விவாதத்தை டி.வி.யில் பார்த்துள்ளனர். இதன்மூலம் கடந்த 36 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1980-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜிம்மி கார்டர்- ரொனால்டு ரீகன் இடையே நேரடி விவாதம் நடந்தது.
இதனை 8 கோடியே 6 லட்சம் பேர் மட்டுமே டி.வி.யில் பார்த்தனர். இதுவரை அதுவே அதிகம் பேர் பார்த்து ரசித்த நேரடி விவாதமாக கருதப்பட்டு வந்தது.தற்போது ஹிலாரி- டிரம்ப் நேரடி விவாதம் அந்த வரலாற்று சாதனையை முறியடித்தது.
மேலும் விவாதத்தின் போது தனக்கும், டிரம்புக்கும் இடையேயான வித்தியாசத்தை ஹிலாரி விளக்கமாக எடுத்துரைத்துள்ளதுடன். முதல் விவாத முடிவில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டனுக்கு பெருமளவு ஆதரவு பெருகியுள்ளது.
அடுத்த விவாதம் வருகின்ற அக்டோபர் 9 திகதி நடக்கின்றது. அப்போது ஹிலாரிக்கு எதிரான கருத்துக்களை கூறி மக்கள் ஆதரவை பெறுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.